Presidential Secretariat of Sri Lanka

நிர்மாணத்துறையின் புரட்சிக்கு தேசிய பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

  • மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை…
  • அரசின் வேலைத்தளங்கள் மற்றும் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை…
  • தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாக பொறியிலாளர்கள் உறுதி…

 நகர மற்றும் கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உள்நாட்டு பொறியியலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

“குடிப்பதற்கும் பயிர்ச் செய்கைக்கும் நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள் காரணமாக நாடு முழுவதும் பல பிரதேசங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குளங்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமிய வீதி கட்டமைப்பின் அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்பட வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பின் அபிவிருத்தி திட்டங்களில் எந்தப் பயனும் இல்லை. அவ்வாறே  அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பின் பல எதிர்பார்ப்புகளுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற என்னாலும் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் அங்கத்தவர்களுடன் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

பல வருடங்களாக அபிவிருத்தி திட்டங்களை வரைதல் முதல் நிர்மாணப் பணிகளை கண்காணிப்பு செய்தல் மற்றும் நிர்மாணங்களை மேற்கொள்ளுதல் போன்ற அத்தனை விடயங்களும் வெளிநாட்டு பொறியியலாளர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தலைமை வகித்த செயற்திட்டங்களில் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து செயற்திட்டங்களை முன்னெடுக்கும் கலாசாரத்தை நிறுத்த வேண்டுமென்றும், எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உள்நாட்டு பொறியியலாளர்களிடமும் நிறுவனங்களிடமும் ஒப்படைப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் இளைஞர்களின் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. நிர்மாணத்துறையில் ஏற்படுத்த எதிர்பார்க்கும் புரட்சியிலும் உள்நாட்டு  பொறியியலாளர்கள் மீது நம்பிக்கை வைப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், வரலாற்றில் மிகச் சிறந்த பொறியியலாளர்கள் உருவாகிய யுகத்தை மீண்டும் உருவாக்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.

தம்மீது ஜனாதிபதி அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாத்து உள்நாட்டு பொறிமுறையினுள் நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக பொறியியலாளர்கள் உறுதியளித்தனர்.

அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனம் மற்றும் அரச வேலைத்தளங்களின் நிலைமை தொடர்பாக தாம் கவலைப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அந்நிறுவனங்களை ஏற்கனவே இருந்த நிலையை விடவும் முன்னேற்றும் பொறுப்பு பொறியியலாளர்களுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

தாம் நாட்டை பொறுப்பேற்கும்போது இருந்த நிலைமையை விட கொவிட் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள சவால் பத்து மடங்கிலும் அதிகமானது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பலமான சக்தியுடன் அதற்கு முகங்கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களை பெறுபவர்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்க்கும்போது உள்நாட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் பொறியியலாளர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அடிப்படை கட்டமைப்பு பாதிக்கப்படாத வகையில் குளங்கள் மற்றும் நீர்ப்பாசன முறைமையை புனர்நிர்மாணம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்பது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாகும். அதற்காக அபிவிருத்தி திட்டமொன்றை நோக்கி பயனிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டை சரியான திசையில் கொண்டு செல்வார் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாக பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பல அரச, தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(English) Recent News

Most popular