Presidential Secretariat of Sri Lanka

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவத் தயார் – அமெரிக்க இராஜாங்க செயலாளர் உறுதியளிப்பு…

சர்வதேச தொடர்புகளின் போது நாட்டின் சுயாதீனத்திற்கும் இறைமைக்கும் முதலிடம் – ஜனாதிபதி தெரிவிப்பு

  • முதலீட்டு மேம்பாட்டுக்கு முன்னுரிமை
  • போதைப்பொருள் ஒழிப்புக்கு உதவி
  • இந்து சமுத்திரம் சமாதான வலயமாக இருக்க வேண்டும்

பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு இலங்கையுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவிவரும் வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தனது நாட்டின் நோக்கமாகும் என்றும் இராஜாங்க செயலாளர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் நாட்டுக்கு வருகைதந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அவர்கள் தலைமையிலான உயர் மட்ட தூதுக்குழு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர். இரு தரப்புகளுக்குமிடையிலான சுமுகமான கலந்துரையாடலில் இருதரப்பு மற்றும் வலய முக்கியத்துவம் வாய்ந்த பல துறைகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

உயர் அபிவிருத்தி மட்டத்தை அடைந்துகொள்வதற்கான முயற்சியில் இலங்கையுடன் தொடர்ச்சியாக இணைந்திருப்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்ட இராஜாங்க செயலாளர் பொம்பியோ அவர்கள், நாட்டினுள் அமெரிக்க முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அதிக முன்னுரிமையளிப்பதாகவும் குறிப்பிட்டார். சுற்றுலா துறையானது தொழில்கள் மற்றும் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டுவதற்கு உதவும் முக்கிய துறையாகும். முறையான திட்டத்தின் கீழ் அதன் முன்னேற்றத்திற்கு உதவ தனது நாடு தயாராக இருப்பதாகவும் இராஜாங்க செயலாளர் தெரிவித்தார்.

இலங்கையின் தேவை தொடர்ந்தும் கடன் பெறுவதல்ல. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதே எமது தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டுக்கு தடையாக அமையும் அதிகாரத்துவ மைய நடைமுறைகளை நீக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை அதிக விவசாய வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கு தேவையான வளங்களை கொண்ட நாடாகும். எமது விவசாயத் துறையை நவீனமயப்படுத்த வேண்டும். அதற்காக அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக எமக்கு உதவுங்கள் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை விளக்கிய ஜனாதிபதி அவர்கள், அது நடுநிலைமையை அடிப்படையாக கொண்டதாகும் எனத் தெரிவித்தார்.

இலங்கை ஏனைய நாடுகளுடன் பேணி வரும் உறவுகள் பல அம்சங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவதாக தெரிவித்தார். வரலாற்று, கலாசார உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு அவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றது. சர்வதேச தொடர்புகளின் போது நாட்டின் சுயாதீனத்தன்மை, இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை விட்டுக்கொடுப்பதற்கு தான் ஒருபோதும் தயார் இல்லை என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பிரிவினைவாத யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனா உதவியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அதன் விளைவாக இலங்கை கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தன. இலங்கையின் பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு அமெரிக்கா வழங்கும் பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பொருள் உதவிகளும் இதில் அடங்கும்.

போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு கரையோரப் பாதுகாப்பு சேவையை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, அதற்கு உதவ அமெரிக்காவுக்கு முடியும் என இராஜாங்க செயலாளர் பொம்பியோ அவர்கள் தெரிவித்தார்.

இந்து சமுத்திரம் ஒரு சமாதான வலயமாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் என்று இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் நட்புறவு குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டார். இந்து சமுத்திரம் சமாதான வலயமாக இருக்க வேண்டும் என்பதே இலங்கையினதும் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சர்வதேச மன்றங்களில் மனித உரிமைகள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்பட இருதரப்பும் இணக்கம் தெரிவித்தன.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா டெப்லிட்ஸ், உதவி இராஜாங்க செயலாளர் பிரியன் புலதாவோ, தெற்கு மற்றும் மத்தியாசிய நடவடிக்கைகளுக்கான பணியகத்தின் தலைமை பிரதி உதவிச் செயலாளர் டீன் தொம்ஸன் மற்றும் இராஜாங்க செயலாளரின் சிரேஷ்ட ஆலோசகர் மேரி கிசல் ஆகியோர் அமெரிக்க தூதுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாகும்.

வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ரவிநாத் ஆர்யசிங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(English) Recent News

Most popular