Follow Us:

Tuesday, Jun 03
மே 30, 2025

அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன பிரதிநிதிகளுடன் வலுசக்தி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சந்திப்பு

அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன (Abu Dhabi National Oil Company) பிரதிநிதிகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி , தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார பிரதி அமைசச்ர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இருநாடுகளுக்கு இடையிலான கனிய எண்ணெய் தொழில்துறை தொடர்பிலான விநியோக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை அறிந்துகொண்டு எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவதற்கு அமைவான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு அவசியமான கச்சா எண்ணெயினை நீண்ட காலத்திற்கு நியாயமான விலையில் வழங்குவது தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் விரைவான ஒப்பந்தமொன்றை கைசாத்திடுவதுடன், இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளின் மேம்பாடு மற்றும் அதன் மூலம் வலய மட்டத்தில் கனிய எண்ணெய் சுத்திகரிப்பு சந்தைக்குள் குறிப்பிடத்தக்க பகுதியை அடைந்துகொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ( Khaled Nasser Al Ameri) மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன Crude and Condensate இன் சிரேஷ்ட உப தலைவர் அப்துல்லா அல் குபாயிசி (Abdulla al Qubaisi) உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Top