Follow Us:

Friday, Jun 06
ஜூன் 5, 2025

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகைத் திட்டம்

போபிட்டிய, பமுனுகம மகா வித்தியாலயம் மற்றும் மாவனெல்லை, சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று இன்று (05) ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை தந்தது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ தொடர் வேலைத்திட்டங்களுடன் இணைந்த வகையில் இந்தப்பாடசாலைகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

பழைய பாராளுமன்றத்தைப் பார்வையிட்ட பிறகு, இந்த மாணவர்களுக்கு பாராளுமன்ற வரலாறு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இதேவேளை, இன்றைய உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலைகளுக்கு பழங்கள் மற்றும் மூலிகைத் தாவரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் பங்பளிப்பில் பாடசாலைகளுக்கு 20,000 தென்னை மரக்கன்றுகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் இதற்கு இணையாக நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த பாடசாலை மாணவர்கள் உலக சுற்றாடல் தின உறுதிமொழியை வழங்கியதோடு, சுற்றாடல் பாடலையும் பாடினர்.

இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தோட்ட முகாமைத்துவ பீடத்தின் தோட்டக்கலை மற்றும் நிலத்தோற்றவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் கபில யகந்தாவல, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சிறப்புரை ஆற்றியதுடன், மரங்களை நட்டு பராமரிப்பது விழிப்புணர்வுடன் செய்யப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“நீங்கள் விழிப்புணர்வுடன் ஒரு மரத்தை நட்டால், அதிக நன்மைகளைப் பெறலாம். மரங்களை நடுவதுபோன்று அவற்றைப் பராமரிப்பதும் மிக முக்கியம். குழந்தைகளைப்போன்று ஒரு மரத்தை நட்டு விட்டு அதனை கைவிட்டால், மரம் அது விரும்பியபடி வளரும். 40-50 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மரங்கள் முறிந்து விழும்.

தற்போது காற்றின் நிலைமை காரணமாக இதனை சாதாரணமாகக் காணலாம். அதைத் தடுக்க முடியாது, ஆனால் அதைக் குறைக்கலாம். நீங்கள் விழுந்த மரத்தின் அருகே சென்று பார்க்கும்போது, அதன் வேர் பூமியின் மேற்பரப்பில் உள்ளது. கிராமப்புறங்களில், மரங்களின் வேர் தரையுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் ஒரு மரத்தை நட்டு, மரத்தின் தண்டு வரை கான்கிரீட் ஊற்றுகிறோம். நம்மைப் போலவே, மரங்களும் சுவாசிக்க வேண்டும்.

வேர்களுக்கு ஒட்சிசன் தேவை. நாம் மரத்தை நட்டு அதை நன்றாக மூடிவிடுவோம். அதனால் மரம் அழுத்தத்திற்கு ஆளாகிறது, காற்று வீசும்போது, அது முன்னோக்கி விழுகிறது. எனவே, மரங்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் பராமரிக்கும் போதும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அநுருத்த லொகுஹபுஆரச்சி, உதவிப் பணிப்பாளர் நதீக தங்கொல்ல உட்பட அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Top