Follow Us:

Wednesday, Jul 09
ஜூலை 9, 2025

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

நாட்டில் தொழிற்துறை மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட களுத்துறை நகரத்தை பரந்த அபிவிருத்திக்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவாக செயற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு அனைத்துத் தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது.

சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டதன் பின்னர், பிரதான நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் மற்றும் வினைத்திறன் மிக்கதாக்குவது குறித்தும், அதன் மூலம் களுத்துறை நகரில் தற்போது இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தெற்கு அதிவேகப் பாதையில் அண்மித்த இடத்திலிருந்து களுத்துறை நகரத்துக்கான நுழைவாயில் ஒன்றை உருவாக்குதல், களுத்துறை நகரத்திற்கான பிரவேச வீதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல், களுத்துறை நகரத்தை வலயங்களாக பிரித்து அபிவிருத்தி செய்தல் ஆகிய விடயங்கள் குறித்து இந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார, களுத்துறை மாநகர சபை நகரபிதா தனுஜ் சோமரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, களுத்துறை மாவட்ட செயலாளர் ஜி.எம்.ஜனக கே.குணவர்தன, களுத்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.ஏ.பி.பி. சந்திரசேகர, களுத்துறை நகர ஆணையாளர் பியுமாலி குலரத்ன மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Top