Follow Us:

Wednesday, Jun 04
ஜூன் 2, 2025

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) முற்பகல் கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

பவளப்பாறை சூழல் அமைப்புகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு கிரவுன்-ஆஃப்-தோர்ன்ஸ் பெயரால் அழைக்கப்படும் ஸ்டார் பிஷ் மீன்களை அகற்றுதல்,
கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் உயிரியற் பல்வகைமையை சீர்படுத்தும் செயற்பாட்டைத் தடுக்கும் மீன்பிடி வலைகள் மற்றும் ஏனைய தீங்கு விளைவிக்கும் கடல் கழிவுகளை அகற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், Clean Sri Lanka செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதற்கு பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களித்தன.

புறா தீவு, கடல்சார் தேசிய பூங்கா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கு வடகிழக்கில் நிலாவெளி கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள “பெரிய” மற்றும் “சிறிய” புறா தீவு ஆகிய இரண்டு தீவுகளைக் கொண்டுள்ளது.

கடல்சார் பூங்கா சுமார் 471 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது, ஆனால் நிலப்பரப்பு சுமார் 9 ஹெக்டேர் மாத்திரமே. பெரிய தீவில் உள்ள பவளப்பாறை சுமார் 200 முதல் 100 மீட்டர் உயரமும் கடல் மட்டத்திலிருந்து 44.8 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த தீவு இலங்கையின் மிகவும் உயிரியற் பல்வகைமையைக்கொண்ட மற்றும் சூழலியல் உணர்திறன் கொண்ட கடல்சார் பூங்காக்களில் ஒன்றாக இருப்பதால், அதை சுத்தப்படுத்துவது காலத்தின் தேவை மற்றுமன்றி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும்.

சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள், அழிவுகரமான பவள அறுவடை நுட்பங்கள் மற்றும் சுற்றுலாத்துறையால் ஏற்படும் பவளப்பாறை அழிவு ஆகியவை இந்த சுற்றுச்சூழல் கட்டமைப்பின் முக்கிய சவால்களாக அடையாளம் காணமுடியும். அதேபோல், காலநிலை

மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை ஆகியவை புறா தீவைச் சுற்றியுள்ள பவளப்பாறைகளையும் சேதப்படுத்துகின்றன.

அதன்படி, புறாத் தீவைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாக “Clean Sri Lanka” செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA), திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்,இலங்கை கடற்படை,
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்(IUCN), இலங்கை கடலோடிகள் சங்கம், இலங்கை பொலிஸ், வன சீவராசிகள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், நிலாவெளி படகு சங்கம் மற்றும் சர்வோதய ஆகிய நிறுவனங்களின் செயற்பாட்டு ஆதரவு கிடைத்தது.

பயிற்சி பெற்ற கடலோடிகள், கடல் உயிரியல் வல்லுநர்கள் மற்றும் ஏனைய அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய குழு, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு தரங்களைப் பின்பற்றி இந்த தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டது. இதன் ஊடாக கடல் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையில் உருவாகி வரும் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் பிரதிபலித்ததுடன், இந்த நாட்டின் பிரஜைகள் கடல் பாதுகாப்பில் கொண்டிருக்க வேண்டிய பொறுப்பையும் எடுத்துக்காட்டியது.

2025 ஜனவரி 01ஆம் திகதி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட Clean Sri Lanka வேலைத்திட்டம், தற்போது ஒரு விரிவான தேசிய வேலைத்திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சுற்றாடல், சமூக மற்றும் நிர்வாக சவால்களுக்கு தீர்வுகளைக் கண்டறிவதன் மூலம் இலங்கையை தூய்மையான, பசுமையான மற்றும் நெறிமுறை சார்ந்த நாடாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்த தேசிய வேலைத்திட்டத்தால் எதிர்பார்க்கப்படும் சுற்றாடல் நிலைபேற்றுத்தன்மை என்பது, பொறுப்பான கழிவு முகாமைத்துவத்தை ஊக்குவித்தல், உயிரியற் பல்வகைமையை பாதுகாத்தல், நீரைப் பாதுகாத்தல்,காற்றின் தரத்தை மேம்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் பசுமையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, நீண்டகால சுற்றுச்சூழல் சமநிலையை உறுதி செய்வதுமாகும்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர,பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஜீ. எம். ஹேமந்த குமார மற்றும் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள்,பிரதேசவாசிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Top