நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், நேற்று (28) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
ஜனாதிபதி அவர்களும் இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் அனைத்து வகையான இருதரப்பு உறவுகளையும் மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மிகவும் பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்து-லங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவை கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்களாகும்.
இந்தியாவின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் விரைவாக நிறைவுசெய்யப்பட வேண்டும் என்று இனக்கம்காணப்பட்டது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் புதிய துறைகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய இந்தியாவின் விருப்பம் குறித்து திரு. அஜித் டோவால் தெரிவித்தார்.
ஏற்கனவே மிகவும் திருப்திகரமாகவுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்களும் இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் வலியுறுத்தினர்.