Presidential Secretariat of Sri Lanka

அதிகாரம் இருந்தபோதும் கிராமத்திற்குச் செல்லாதிருக்கும் அரசியல் போக்கு மாற்றப்பட்டது -ஜனாதிபதி லாத்துகலவில் தெரிவிப்பு

சட்டத்தை அமுல்படுத்துவதேயன்றி அரசியல் பழிவாங்கல் இல்லை: மோசமான அரசியலுக்கும் தயாராக இல்லை.

         தடையின்றி விவசாயத்திற்கு இடமளிக்க கொள்கை ரீதியான முடிவு …

  • அதிகாரிகள் கிராமத்திற்கு செல்ல வேண்டும் …
  • அனைத்து கிராமங்களுக்கும் பேண்தகு அபிவிருத்தி …

அதிகாரம் இருந்தபோதும் கிராமத்திற்குச் செல்லாத அரசியல் நடைமுறையை மாற்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இருந்து அடையாளம் கண்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி கிராமங்களுக்கு பேண்தகு அபிவிருத்தியை கொண்டுவருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தவறு செய்தவர்களைத் தண்டிப்பது சட்டத்தின் கடமையாகும். அதில் தலையிட்டு முந்தைய அரசாங்கம் செய்ததைப் போல அரசியல் பழிவாங்க தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். மக்களை தவறாக வழிநடத்தாமல் நியாயமான அரசியலில் ஈடுபடுமாறு ஜனாதிபதி அவர்கள் எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

மகா சங்கத்தினர் உட்பட மக்கள் தான் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளரின் வகிபாகத்தை எதிர்பார்க்கின்றனர். பித்தளை சந்தியில், எல் டீ டீ யீ பயங்கரவாதிகள் தன்னை இலக்குவைத்து தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தினர். அதைச் செய்த பயங்கரவாதத் தலைவருக்கு நேர்ந்த கதியை மக்கள் அறிவார்கள். நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அல்லது கோட்டாபய ராஜபக்ஷ என்ற எந்த ஆளுமைக்கு ஏற்பவும் செயற்பட தயார் என்ற போதும், எதிர்க்கட்சி போன்று மோசமான அரசியலுக்கு தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (09) காலை அம்பாறை, உஹனவில் உள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். ஜனாதிபதி அவர்கள் பங்கேற்ற ஐந்தாவது ‘கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சி இதுவாகும்.

முதலாவது நிகழ்வு 2020 செப்டம்பர் 25 ஆம் திகதி பதுளை ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவில் உள்ள வேலன்விட கிராமத்தில் ஆரம்பமானது. இரண்டாவது நிகழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பிரதேச செயலக பிரிவில் உள்ள ஹிம்பிலியாகடவிலும் மூன்றாவது பலங்கொடை இம்புல்பே, ராவணாகந்தவிலும் நான்காவது கெபிதிகொல்லேவ கனுகஹவெவ கிராமங்களிலும் நடைபெற்றன.

இன்றைய உரையாடலுக்கு அம்பாறை நகரிலிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள உஹன பிரதேச சபைக்கு உட்பட்ட லாத்துகல கிராமம் தேர்வு செய்யப்பட்டது. மக்கள் சந்திப்பு வேரெங்கடகொட லாத்துகல ஆரம்ப பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. உஹன, தமன, கலபிடகல, கொனாகொல்ல, பதியதலாவ, தெஹியத்தகண்டிய, மஹியங்கனை, பண்டாரதுவ, மககண்டிய, பொக்கபெத்த உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் குறைகளை ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்க வருகை தந்திருந்தனர்.

லாத்துகல கிராமத்தின் பரப்பளவு 09 சதுர கி.மீ. ஊவா வெல்லஸ்ஸ கலவரத்தில் இருந்து தப்பிய 15 குடும்பங்களின் குடியேற்றத்துடன் இங்கு குடியேற்றம் ஆரம்பமானது என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இது 231 குடும்பங்களையும் 783 மக்கள்தொகையையும் கொண்டுள்ளது.

லாத்துகல உட்பட சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மழை நீரினால் மேற்கொள்ளப்படும் சேனைப் பயிர்ச்செய்கையாகும். அவர்கள் சோளம், கௌபி, குரக்கன் மற்றும் காய்கறிகளை பயிரிடுகிறார்கள். சேனா படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். காட்டு யானைகளின் அச்சுறுத்தலும் அவர்களைப் பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும்.

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அளவீடுகளில் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக குறிக்கப்டுவதால் பாரம்பரிய சேனை பயிர்ச்செய்கையிலிருந்து விலக வேண்டியிருப்பது லாத்துகல மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாகும். நாட்டின் அனைத்து கிராமங்களிலும் பாரம்பரியமாக பயிரிடும் விவசாயிகளை வனவிலங்குகள் அல்லது வன பாதுகாப்பு அல்லது வேறு எந்த நிறுவனத்தினதும் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் உள்ளாகாது தொடர்ந்தும் பயிரிட அனுமதிக்க கொள்கை சார்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் மக்களிடம் தெரிவித்தார். அதற்கேற்ப மக்களுக்கு உதவுமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒரு விதமாகவும் அதிகாரிகள் பிரச்சினைகளைப் பார்க்கும் முறை வேறு விதமாகவும் உள்ளது. கொழும்பில் இருந்து கொண்டு கருத்துக்களை உருவாக்குபவர்களின் கருத்துக்கள் இன்னும் முரணானவை. எனவே, அதிகாரிகள் தங்களை தங்கள் அலுவலகங்களுக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளாமல், கிராமங்களுக்குச் சென்று உண்மையான மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

மக்கள் சிகிச்சைக்காக 16 கி.மீ தூரத்தில் உள்ள உஹன மருந்தகத்திற்கு அல்லது 24 கி.மீ தூரத்தில் உள்ள அம்பாறை மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதற்கு தீர்வாக, சுற்றியுள்ள பல கிராமங்களின் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக பொக்கபெத்த கிராமத்தில் ஒரு ஆரம்ப சுகாதார மையத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

லாத்துகல ஆரம்ப பாடசாலைக்கு புதிய கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கவும், தற்போதுள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டது. உஹன வித்யாலோக வித்தியாலயம், வலகம்புர வித்யாலயம், உஹன வேரங்கெடகொட மகா வித்யாலயம், கலஹிட்டியாகொட, பிரியங்கல, ரஜகல, நுகேதென்ன மற்றும் உஹன திஸ்ஸ, அம்பாறை தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களின் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அம்பாறை-லாத்துகல வீதியின் பணிகளை விரைவில் நிறைவுசெய்யவும் அறிவுறுத்தப்பட்டது. லாத்துகல – பொக்கபெத்த – எதுல் ஓய வரையான வீதி, பக்மிட்டியாவ – பன்னல்கம, மஹஓய – குருந்துவின்ன வீதிகளின் பணிகளையும் விரைவில் நிறைவுசெய்ய உத்தரவிடப்பட்டது. 100,000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 1150 கி.மீ வீதிகளை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை பொறுப்புடன்  நிறைவேற்றக்கூடிய ஒப்பந்தக்காரர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக இருக்கும் நீர் பற்றாக்குறைக்கு தீர்வாக கொட்டபத்தமன குளத்தை புனரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் குடிநீர் பிரச்சினை குறித்து ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார். லாத்துகல கிராம வீதிகள் வழியாக நீர் குழாய்களை பதிக்குமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார்.

ரம்பகன் ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து பதியதலாவைக்கு நீர் வழங்கவும், டெம்பிட்டிய, பூனாவளி, மல்லியத்தீவு உள்ளிட்ட பல கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. யோதகண்டிய, கொட்டபத்தமன, லாத்துகல, ஹுலன்னுகே, ஹந்தபாதாகம உள்ளிட்ட குளங்களை விரைவில் புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

லாத்துகல கிராமத்தில் உர  களஞ்சிய தொகுதியொன்றை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

ஸ்ரீ லங்கா டெலிகொம் , மொபிடெல் நிறுவனம் நன்கொடை அளித்த மூன்று கணினிகளையும் லாத்துகல மற்றும் வித்யாலோகா பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாணவர்களிடம் ஜனாதிபதி அவர்கள் வழங்கினார்.

இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பாராளுமன்ற உறுப்பினர்கள் டபிள்யூ.டி. வீரசிங்க, திலக் ராஜபக்ஷ, ஏ.எல்.எம் அதாவுல்லா, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பலர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

(English) Recent News

Most popular