Presidential Secretariat of Sri Lanka

“2030 இல் அனைவருக்கும் ஆங்கிலம்” வேலைத்திட்டம், அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வரும் – ஜனாதிபதி

  • நாட்டின் மீது அக்கறை இருக்குமாயின் இந்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்காக புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முன்வருமாறு புலம்பெயர் தமிழ், சிங்களவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு.

மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது, ஏனைய மொழி அறிவையும் மாணத் தலைமுறைக்கு வழங்க வேண்டும் என்பதால் 2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) நடைபெற்ற, டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபகரும் தலைசிறந்த கல்வியலாளருமான மறைந்த ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு “மாகே மங்பெத” என்ற சுயசரிதை நூலும் வெளியிடப்பட்டது.

அதிபர்கள் ஆயிரம் பேருக்கு மேற்படி நூலை வழங்குவதற்கான ஆரம்பகட்டமாக 10 பேருக்கு நூல்கள் வழங்கப்பட்டன.

இந்நாட்டின் கல்வித் திட்டத்தை மறுசீரமைப்புக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, “அனைவருக்கும் கல்வி” என்பதே ஆர்.ஐ.டி அலஸின் நோக்கமாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

பணம் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு பிள்ளைக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நாட்டு பிள்ளைகளின் உயர் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய பல்கலைக்கழங்களை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதற்கு பங்களிப்பு வழங்கும் தனியார் துறையினருக்கு குறைவின்றி ஆதரவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் உறுதியளித்தார்.

நாட்டின் மீது அக்கறை இருக்குமாயின் இந்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்காக புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழ், சிங்கள இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதே அனைத்து பெற்றோரின் எதிர்பார்ப்பாகும். கல்வியை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் ஜப்பான், சீனா, அரபு, கொரிய மொழிகளையும் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.

2030 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டமும் தயாரிக்கப்படும்.

இந்நாட்டின் உயர்கல்வி தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இந்நாட்டின் இலவசக் கல்வி இருப்பதாக கூறினாலும் பெருமளவானோர் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் இந்நாட்டு பிள்ளைகள் உயர்கல்வி பயில்கிறார்கள். அந்த நாடுகளில் காணப்படும் கல்வி முறைமைகளை நமது நாட்டிலும் செயற்படுத்துவோம்.

பல்கலைக்கழங்களுக்கு செலுத்த அவசியமான பணத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்குவதே இலவச உயர்கல்வியாகும் என பலரும் கூறுகிறார்கள். இருப்பினும் மற்றைய நாடுகளில் அந்த முறையில் உயர்கல்வி வழங்கப்படுவதில்லை.

கல்விச் செயற்பாடுகளை தொடர மாணவர்களுக்கு சலுகை கடன் வழங்கப்படுகிறது. அதனால் விரும்பிய பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மாணவருக்கு கிடைக்கிறது. எமது நாட்டில் அந்தத் தெரிவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே செய்கிறது. அதனால் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதேபோல் பணம் இல்லாதன் காரணத்தால் எந்தவொரு மாணவருக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடாது.

இந்நாட்டில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தற்போதுள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு அவசியமான வசதிகளை வழங்கி அதன் பலன்களை 05 வருடங்களில் அடைய வேண்டும். அதன் போது மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும். அதேபோல் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு இணையான 03 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கிறோம்.

அதேபோல் அரச சார்பற்ற நிறுவனங்களை ஆரம்பிக்கவும் நாம் அனுமதி வழங்குவோம். தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில மாணவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படும். எனவே காணிகளை விற்பனை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நாட்டின் பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் வெளிநாட்டு மாணவர்களின் வருகையும் அதிகரிக்கும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன,

”இன்றைக்கு 60 வருடங்களுக்கு முன்பாக எமக்கு முன்னுதாரணமாகவும் ஆசிரியராகவும் அறிமுகமாகிய ஆர்.ஐ.டி.அலஸ், கல்வித்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியவர். அவரின் வழிகாட்டலின் கீழ் இந்நாட்டு பாடசாலைகள் முன்னுதாரணமாக பிரஜைகளை உருவாக்கும் மையமாக மாறின.

கல்வித்துறைக்கு முன்னோடியாக திகழ்ந்தார். ரோயல் கல்லூரியில் மாற்றத்தை ஏற்படுத்திய அலஸ் டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியையும் ஸ்தாபித்து மாணவர்களின் கல்விக்கு புதிய வழியை காட்டினார். கல்விக்கு மேலதிகமாக நிர்வாகம் தொடர்பிலான தெரிவையும் கொண்டிருந்தார். அவருடன் கல்வி மற்றும் மேலதிக செயற்பாடுகளிலும் பங்கெடுத்துள்ளோம்.

அவர் மாணவர் படைக்கு பொறுப்பாளராக இருந்த காலத்தில் அவருடன் நெருக்கமாக செயற்படும் வாய்ப்பு கிட்டியது. அதன்போதான பயிற்சிகள் வாழ்க்கை வளப்படுத்துவதற்கான பயிற்சியாகவும், ஒழுக்கதுக்கான வழிகாட்டலாகவும் அமைந்தன. அவரால் ஆசிரியர் தொழிலுக்கு உரிய கௌரவமும் வழங்கப்பட்டது.” என்று பிரதமர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,

”இன்று டீ.எஸ். சேனநாயக்க கல்லூரியில் 6,000 மாணவர்கள் உள்ளனர். 1 – 13 வரையிலான 157 வகுப்பறைகள் காணப்படுகின்றன. முழு பாடசாலையும் (WIFI) வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அலஸின் தூரநோக்கின் பலனாகவே அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தில் 900 அதிபர்கள் உள்ளனர். அவர்களுக்கு, அலஸின் வாழ்க்கை வரலாறு சிறந்த பாடமாக அமைந்திருக்கும். கொவிட் பரவலின் பின்னரான காலத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலின் காரணமாக ஆரம்ப கல்வி நெருக்கடிகளை சந்திப்பதாக கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கிறோம். உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது நமது பிள்ளைகளின் கல்வித் தேவையை தாமதப்படுத்த முடியாது. அதற்கு அவசியமான கல்வி மறுசீரமைப்புக்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

2024இற்கான புத்தங்கள் தற்போதும் அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். யுனெஸ்கோவுடன் இணைந்து 8 பாடசாலைச் சேர்ந்த 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி கூப்பன்களைப் பகிர்ந்தளிக்கவுள்ளோம். அரசாங்கத்தின் நிதியை மாத்திரம் பயன்படுத்தாமல் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளைப் பெற்றுக்கொடுப்போம். யார் கல்வி அமைச்சராக இருந்தாலும் 4 வருடங்களுக்குள் அந்த உதவிகள் நாட்டுக்கு கிடைக்கும்.” என்று கல்வியமைச்சர் தெரிவித்தார்.

மகா சங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் டிரான் அலஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, கேட்வே சர்வதேச பாடசாலை குழுமத்தின் தலைவர் வைத்தியர் ஹர்ஷ அலஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News