Presidential Secretariat of Sri Lanka

ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வடக்கில் முழுமையான அபிவிருத்தி

  • மேல் மாகாணத்தை போலவே மற்றைய மாகாணங்களிடமிருந்தும் பங்களிப்பை பெற்று நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்வோம்.
  • கொழும்பு, கண்டி, வடக்கு இந்நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும்.
  • விவசாய கல்விக்காக நாட்டை தயார்படுத்தும் வேளையில் வட. மாகாண விவசாயிகள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளோம் – வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு.

ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் எஞ்சின் ஆக இயங்குகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு 05 பிரதான எஞ்சின்களுடன் இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் இன்று (05) நடைபெற் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி,சுகாதாரம், மீள்குடியமர்த்தல், காணி, மின்சாரம்,குடிநீர், சுற்றுலா, வனவன பாதுகாப்பு, மீன்பிடித் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி அவ்விடத்திலேயே அறிவித்தார்.

கொழும்பு, கண்டி, வடக்கு இந்நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு எஞ்சின் மாத்திரமே உள்ளது. அதற்கு 50% பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்தே பெறப்படுகிறது. மற்றை மாகாணங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார பங்களிப்பு மந்தமான நிலையிலேயே உள்ளது. நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கு எஞ்சின்களின் எண்ணிக்கையையை அதிகரிக்க வேண்டும். அதற்காக மற்றைய மாகாணங்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக சில மாகாணங்கள் அறியப்பட்டுள்ளன. வடக்கு,மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக மேம்படுத்தப்பட வேண்டும்.

தற்போது நிதி பலமும் இருப்பதால் இடைநிறுப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். அதேபோல் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்வதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறவுள்ளன.

மேலும் வட.மாகாணத்திடமிருந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. வட. மாகாணத்திலிருந்து காற்று மற்றும் வெப்ப நிலை காரணமாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தயாரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வட. மாகாணத்தில் தயாரிக்கூடிய மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு பார்க்கும் போது எஞ்சிய தொகையை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலையும் உள்ளது. அதற்கான பேச்சுவார்தைகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வட.மாகாணத்தின் விவசாயிகள் திறமையும் செயற்திறனும் கொண்டவர். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வட.மாகாணத்தின் விவசாய நிலங்களை முகாமைத்துவம் செய்வதன் வாயிலாக ஏற்றுமதி விவசாய தொழிற்துறையை பலப்படுத்தலாம் ” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன,

நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதாளத்தில் விழுந்து கிடந்த போது நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியமை சிறப்புக்குரியதாகும்.

ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது சமயல் எரிவாயு இருக்கவில்லை, எரிபொருள் இருக்கவில்லை. மின் துண்டிப்பு தொடர்ச்சியாக நீடித்தது. வெளிநாட்டு கையிருப்பு முற்றாக தீர்ந்துப்போயிருந்தது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தினார். அதனால் இன்று வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளது. வட. மாகாணத்தின் வீதிக் கட்டமைப்புக்களை பலப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோல் போக்குவரத்து செயற்பாடுகளை பலப்படுத்தி சுற்றுலா வலயமாக மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படு வருகின்றன.

வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்,

கடந்த முறை உயர்தரத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணம் பெற்றுக்கொண்டது. க.பொ.த. சாதாரண தர பரீட்சையிலும் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருந்தன. மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

வட. மகாண கல்வி அபிவிருத்திக்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாமாக முன்வந்து செயற்திறனுடன் பணியாற்றி வருகின்றனர். அது தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியும். சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்திகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், விவசாய அபிவிருத்தி திட்டங்கள் பலவும் தற்போதும் ஆரம்பிக்கபட்டுள்ளன. குறிப்பாக இதுவரையில் பயிர்செய்யப்படாத நிலங்களில் பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான தலையீடுகளை மேற்கொண்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இப்பிரதேச விவசாயிகளின் அறுவடைகளை கொண்டுச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த முறை எமது பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதும் இங்குள்ள தேவைகளை ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இம்முறையும் ஜனாதிபதியை வரவேற்று நன்றி கூறுகின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான காணிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை விவசாயத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், யானை வேலி பராமரிப்பு மற்றும் மீன்பிடி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினறுமான குலசிங்கம் திலீபன்,

வவுனியா மாவட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பான அறிவிப்பு முதன்முறையாக வனவள திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

அதற்காக ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். வவுனியா மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
அதற்கு தேவையான மேய்ச்சல் நிலங்களை விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,

ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வரவு செலவுத்திட்ட கூட்டத்தொடரின் போது மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. அவர்களில் இருவரை நீங்கள் விடுவித்துள்ளீர்கள். அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம்,

ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட சுமார் 12 அரசியல் கைதிகள் இன்னமும் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அல்லது பிணையில் விடுவிக்க விசேட அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

யுத்தம் நிறைவடைந்தாலும் வவுனியாவில் அபிவிருத்திப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றார். காணி விடுவிப்புப் பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளதால், அதற்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். மேலும், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். நோஹரதலிங்கம், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, சமூக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத் சந்திர மற்றும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(English) Recent News

Most popular