Presidential Secretariat of Sri Lanka

நாட்டுக்குத் தேவையான பாலை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை – கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத்

நாட்டிற்குத் தேவையான பால் உற்பத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களைப் வலுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார்.

தற்போதுள்ள 06 பால் உற்பத்தி நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு உற்பத்தி நிலையங்களைத் திறப்பதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகள் பிரான்ஸ் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத்,

நாட்டிற்குத் தேவையான பால் உற்பத்தியில் நாம் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. தேசிய தேவையில் 40% மாத்திரமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய 60% இறக்குமதி செய்வதற்கு 34 பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. ஆண்டுக்கு எழுநூற்று ஐம்பது மில்லியன் லீட்டர் பால் தேவைப்பட்டாலும், 350 மில்லியன் லீட்டர் மாத்திரமே உற்பத்தி செய்கிறோம்.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, பால் உற்பத்திக்கு சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களை வலுப்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், பால் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பிரான்ஸ் நாட்டின் ஆதரவுடன் 06 பால் உற்பத்தி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வாரியபொல, வென்னப்புவ, அத்தனகல்ல, கொழும்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் உற்பத்தி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் அண்மையில் நாவலப்பிட்டியில் இவ்வாறான பால் உற்பத்தி நிலையம் ஒன்று திறக்கப்பட்டது. இத்தொழிற்சாலைக்கு தேவையான பால் பதப்படுத்தும் உபகரணங்களை

இறக்குமதி செய்வதற்கும், உள்நாட்டுத் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் 600 இலட்சம் ரூபா உதவி வழங்க இருக்கிறது. இதற்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய நிர்மாணங்களுக்காக நாவலப்பிட்டி பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம் 60 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 5000 லீட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இவ்வாறான தொழிற்சாலைகளை ஆரம்பிக்க உதவுமாறு பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எமது அமைச்சு பரிந்துரைத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 250 மில்லியன் ரூபாவை பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கியுள்ளார். குறிப்பாக ஆடு வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் கால்நடை தீவனத்தை வரிச்சலுகையுடன் பண்ணையாளர்களுக்கு நியாயமான விலையில் வழங்க கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

(English) Recent News

Most popular