Presidential Secretariat of Sri Lanka

வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டம் வீடியோ தொழில்நுட்பத்தினூடாக …

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும்  அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர். கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.

கோவிட் தொற்றுநோய் மட்டுமல்லாமல் செயல்திறன், வசதி, நேரம் மற்றும் செலவை மீதப்படுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வீடியோ அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அதற்குப் பழக்கப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அவர்கள் முன்னுரிமை அளித்துள்ளார். இது “சபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி அவர்கள் அண்மையில் தொழில்நுட்ப அமைச்சை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தார்.

21 ஆம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக கல்வித்துறை முதலீட்டை பொருளாதாரத் துறையுடன் ஒருங்கிணைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவும் வகையில் தொழில்நுட்ப புத்தாக்க கலாச்சாரத்தை (culture of technology Innovation) கட்டியெழுப்புவது ஜனாதிபதியின் நோக்கமாகும்.

அரச பொறிமுறையையும் சந்தை செயற்பாடுகளையும் எளிமைப்படுத்துவது,  அறிவுப் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் நிர்வாகத்தை விரிவாக்குவது புதிய அமைச்சின் முன்னுரிமையாகும்.

(English) Recent News

Most popular