Presidential Secretariat of Sri Lanka

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல…

  • யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடகக் குழுவொன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது.
  • 60 மாத பதவிக்காலத்தின் பொறுப்புக்களை குறைவின்றி நிறைவேற்றுவேன்
  • அடுத்த ஜனாதிபதி பற்றி எவரும் குழப்பமடையத் தேவையில்லை
  • சட்டங்கள் கொண்டுவரப்படுவது மக்களின் நன்மைக்கே..
  • வறிய நிலையில் உள்ள மக்களுக்கு மேலும் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகள்..
  • மக்களின் கோரிக்கையின் பேரில் வலப்பனை, பூன்டுலோயா முழுமையான அபிவிருத்தி

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு..

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல என்றும் சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நாட்டை ஆட்சி செய்ய வெண்டுமென்ற தேவை இருந்தபோதும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

தான் ஜனாதிபதி என்ற வகையில் ஊடகத் துறைக்கு எவவித அழுத்தங்களையும் செய்யவில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பல்வேறு குழுக்கள் மற்றும் ஆட்களின் தேவையின் பேரில் பிழையான ஊடக பயன்பாட்டில் ஈடுபட்டு நாட்டையும் மக்களையும் மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முயற்சித்தால் அத்தகையவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்நிற்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடக குழுவொன்று ஊடக நிறுவனங்களுக்குள் நுழைந்து தேசியத்திற்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் எதிராக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இன்று (20) முற்பகல் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான யோம்புவெல்தென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்“ 15வது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய போதே ஜனாதிபதி அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தது நாட்டை கட்டியெழுப்புவதற்காகவாகும். 60 மாதங்களைக்கொண்ட பதவிக் காலத்தில் 16 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.  இன்னும் குறிப்பிடத்தக்க காலம் உள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றி சிலர் குழப்பமடைந்துள்ளனர். அதுபற்றி எவரும் குழப்பமடையத் தேவையில்லை. என்பதுடன், அதனை தீர்மானிப்பது மக்களேயாகும். எஞ்சியுள்ள பதவிக் காலத்தில் தேசிய பொருளாதாரத்தையும் கிராமிய மக்களையும் முன்னேற்றுவதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அதிகாரிகளின் பொறுப்பு மக்களின் வாழ்க்கைக்கான வழிகளை செய்து கொடுப்பதாகும். ஒருபோதும் அவர்களுக்கு கஷ்டங்களை கொடுக்கக்கூடாது. மக்கள் வாழ்க்கை நிலைமைகளை பாதிக்கும் வகையிலான எவ்வித செயற்பாடுகளையும் அரச அதிகாரிகளிடம் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நான் ஒருபோதும் சுற்றாடலுக்கு அழிவை ஏற்படுத்தவில்லை. நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப் பகுதி முதல் சுற்றாடல் பாதுகாப்பிற்காக எவருமே செய்யாத பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். சுதந்திர சதுக்கம் கூட அன்று குப்பை மேடாக காணப்பட்டது. அந்த நிலைமையை இல்லாமல் செய்து கொழும்பு நகரத்தை பசுமை பூங்காவாக மாற்றினேன். சுற்றாடலுக்காக எதையுமே செய்யாதவர்கள் என்னை நோக்கி விரல் நீட்டுவது கவலைக்குரியதாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் இருந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஹந்தானையில் 30 ஏக்கர் காணியை தனது மகளுக்கு அன்பளிப்பு செய்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்திருந்தால் இன்று அவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து அழுது புலம்ப வேண்டி இருக்காது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 2015 – 2019 காலப் பகுதியில் குருணாகலை மாவட்டத்தில் 77 ஏக்கர் வனப் பகுதியும் புத்தளத்தில் 258 ஏக்கரும் மொனராகலையில் 100 ஏக்கரும் அனுராதபுரத்தில் 224 ஏக்கரும் உட்பட மைலேவ, மாத்தளை, லக்கலை, ரிதிகம, வெலிகன்ன உள்ளிட்ட பல பகுதிகளில் காடழிப்பு இடம்பெற்றுள்ளது. அத்தகையவர்கள் இன்று அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டுவது கேலிக்குரியதாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

வறுமையை ஒழித்து கிராமிய மக்களை பொருாளதார ரீதியாக முன்னேற்றவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும்.  75 வீதமாக உள்ள கிராமிய மக்களில் 35 வீதமானோர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி கிராமிய மக்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவம் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 35,000 பேருக்கு தற்போது தொழில்கள் வழங்கபபட்டுள்ளன. ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை வழங்கும் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மேலும் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்களை வழங்குவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அதற்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்யும்போது சரியான ஆட்களை இனங்காண்பது கிராமிய அரச அதிகாரிகளினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பயிற்றப்பட்ட ஊழியர்கள் இல்லாதிருப்பது நாட்டின் அபிவிருத்தித்திட்டங்கள் தாமதமடைவதற்கு காரணமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை,  களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகல் மற்றும் காலி மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

இன்றைய “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் யோம்புவெல்தென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு வலப்பனை நகரத்தில் இருந்து 13 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. அது வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மிகவும் பின்தங்கிய கிராமமாகும். ஊவ வெல்லச போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய மக்கள் வாழ்கின்ற பாரம்பரிய பிரதேசமாக உள்ள யோம்புவெல்தென்ன கெப்பட்டிபொல நிலமே மீண்டும் சிங்கள இராணுவத்துடன் ஒன்றிணைந்த பிரதேசமாக பிரபல்யம் பெற்றுள்ளது. மருத்துவ குணம்கொண்ட தாவரமான “யோம்புவெல்” அதிகளவு காணப்பட்டதால் இக்கிராமத்தின் பெயர் உருவானதாக குறிப்பிடப்படுகின்றது. 139 குடும்பங்கள் வசிக்கின்ற யோம்புவெல்தென்ன கிராமத்தின் தற்போதைய சனத்தொகை 397 ஆகும். நெல் மற்றும் மரக்கறி பயிர்ச் செய்கையே இம்மக்களின் பிரதான ஜீவனோபாயமாக காணப்படுகின்றது.

“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுவதற்காக நில்தண்டாஹின்ன பொது மைதானத்திலிருந்து யோம்புவெல்தென்னவிற்கு செல்லும் வழியில் திரண்டு இருந்த மக்கள் ஜனாதிபதி அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

மக்களின் பிரச்சினைகள் குறித்து அதன்போது ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்ததுடன், கலகன்வத்த நவோதய பாடசாலை மாணவர்களுடன் புகைப்படத்திற்கும் தோற்றினார்.

உள்நாட்டில் சொசேஜஸ் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் ஒருவர் ஜனாதிபதி அவர்களுக்கு அதனை அறிமுகப்படுத்தியதுடன், தான் அந்த கருத்தை வியத்மக மாநாடொன்றின்போது பெற்றுக்கொண்டதக குறிப்பிட்டு, அதன்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ஜனாதிபதி அவர்களுக்கு காட்டினார்.

நீண்ட காலமாக வன விலங்குகளினால் தமது பயிர்களுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

மொபிடெல் நிறுவனம் வித்தியாபதீப இரண்டாம் நிலை பாடசாலைக்கும் சிதுஹத் மகா வித்தியாலயத்திற்கும் அன்பளிப்பு செய்த இணைய வசதியுடன்கூடிய மடிக் கணினியையும் டயலொக் நிறுவனம் தென்னபோதி ஆரம்ப பாடசாலைக்கு அன்பளிப்பு செய்த தொலைக்காட்சியையும் ஜனாதிபதி அவர்கள் பாடசாலை அதிபர்களிடம் கையளித்தார்.

‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்துவது ஜனாதிபதி அவர்களின் மற்றொரு நோக்கமாகும். “அறிவுப் பலம் கொண்ட சிறுவர் தலைமுறை’ என்ற தலைப்பில் ஜனாதிபதி அவர்கள் பாடசாலைகளுக்கு புத்தகங்களை வழங்கினார். ஒரு பாடசாலைக்கு பல்வேறு பாடத் துறைகளில் 500 புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

உரிமை இன்றி இதுவரை அரச காணிகளை பயன்படுத்தி வந்த குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி அவர்கள் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான 5 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை வீதி போக்குவரத்து கஷ்டங்களாகும். இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. கல்வத்த, யோம்புவெல்தென்ன வீதி, தெரிபெஹ மோலந்தேவ, கலஹா, தெல்தோட்டையிலிருந்து ரிகிலகஸ்கட வீதி, யட்டிவெல்ல மத்துரட்ட வீதி, தெரிபெஹ நில்தண்டாஹின்ன வீதி மற்றும் பல  சிறிய வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவுப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

பிரதேசத்தில் பிரதான மற்றும் சிறியளவிலான 15 பாலங்களை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. யோம்புவெல்தென்ன, லவெல்லகொல்ல, மகுனகஹபிட்டிய, ஹப்புகஹபிட்டிய, கலகத்வத்த உள்ளிட்ட பிரதேசங்களின் அனைத்து குடிநீர்த்திட்டங்களையும் மக்களின் தேவையின்பேரில் முழுமைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வலப்பனை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. தடகெலே, வெலித்துடுவ, பரஹாலந்த, கிரிவடுன்ன, மூகலன், உடகந்த உள்ளிட்ட பிரதேசங்களின் மேலும் பல குளங்களை புனரமைக்கும் பணிகளையும் விரைபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கலகத்வத்த நவோதய பாடசாலை, அருனோதய இந்து வித்தியாலயம், ரன்கெலம்புவ மகாவித்தியாலயம், உடமாதுற ஸ்ரீ வித்தியா பிரதீப வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

மடுல்ல இரண்டாம் நிலை பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

கிராமிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒன்று வீதம் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யவும் பணிப்புரை வழங்கப்பட்டது.

விகாரைகளில் நடத்திச் செல்லப்படும் 12 அறநெறிப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது. மத்திய மாகாணத்தின் பிரிவெனாக்களின் பௌதீக தேவைகளை நிறைவு செய்து தருமாறு பிக்குகள் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்தார்.

13 கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள காணி பிரச்சினைகள் குறித்து “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தின்போது இனங்காணப்பட்டுள்ளது. அந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து உறுதிப்பத்திரங்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார். காட்டு யானைகள் பிரச்சினைக்கு தீர்வாக பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து யானை வேலிகளையும் புனரமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பைனஸ், டேபன்டைன் சுற்றாடலுக்கு பாதிப்பானதாகும் என மக்கள் சுட்டிக்காட்டினர். அவற்றை நீக்கி தேசிய வனச் செய்கையை மேம்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் சுற்றாடல் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

உலகில் சுவையான கோப்பி வகைகளில் நான்காவது இடத்தில் கொப்பிரியா, எரபிக்கா, லக்பெரகும் உள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதற்கு பொருத்தமான சூழலும் காலநிலையும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளது. அந்த கோப்பி செய்கையை மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

வலப்பனை, பொகவந்தலாவ, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட, தெரிபெஹ பிரதேச மற்றும் கிராமிய வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டத்தின் மருத்துவர்கள், தாதிகள் மற்றும் சிற்றூழியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ரிக்கில்லகஸ்கட, வலப்பனை வைத்தியசாலைகளில் இரண்டு பிக்கு வாட்டுகளை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. பிரதேசத்தில் உள்ள அனைத்து தோட்ட வைத்தியசாலைகளின் குறைபாடுகளை கண்டறிந்து நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் திடீர் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கு இராணுவ முகாம் ஒன்றை வலப்பனை பிரதேசத்தில் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

வலப்பனை பிரதேசத்தில் உர மத்திய நிலையமொன்றின் தேவை பற்றி மக்கள் சுட்டிக்காட்டினர். மாவட்டத்தில் இருந்துவந்த பயிர்களை சேகரிக்கும் மத்திய நிலையமும் கடந்த அரசாங்கத்தினால் கவனிக்கப்படாதிருந்தமை மக்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. பயிர்களை சேகரிக்கும் மத்திய நிலையங்களை மாவட்டத்தின் பொருத்தமான இடங்களில் தாபிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பயிரிட முடியாதுள்ள தரிசு வயல் காணிகளில் கறுவா மற்றும் கற்றாலை செய்கையை பிரசித்தப்படுத்தவும் முன்மொழியப்பட்டது.

நீண்ட காலமாக மக்களின் கோரிக்கையாக இருந்து வந்த வலப்பனை மற்றும் பூன்டுலோயா நகரங்களை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, நிமல் பியதிஸ்ஸ, ரமேஸ் மருதபாண்டி, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

நுவரெலியா, வலப்பனை,யொம்புவெல்தென்ன கிராமத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித் திட்டத்தில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை

வறுமை ஒழிப்பு என்பது நாம் முன்வைத்துள்ள கொள்கைத் திட்டத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. அதாவது, வறிய நிலையில் உள்ள கிராமங்களின் வருமான அளவை உயர்த்துவதே எங்கள் அடிப்படைக் கொள்கை. எமது மக்களில் சுமார் 75% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 35% பேர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் மிகவும் பின்தங்கிய இந்த கிராமங்களுக்குச் சென்று அந்த நோக்கத்துடனேயே “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தை முன்னெடுத்து வருகிறேன்.

இந்த 75% மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு அவர்களின் வருமான நிலையை உயர்த்துவது மிகவும் முக்கியம். அதனால்தான் குறிப்பாக விவசாயத்திற்கு, பெருந்தோட்டத் துறைக்கு விசேட கவனம் செலுத்துகிறோம். விவசாய சமூகத்தின் வருமான அளவை அதிகரிக்க நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக உரங்களை வழங்குகிறோம். நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்கப்பட்டது. உள்நாட்டில் பயிரிடப்பட முடியுமான பயிர்கள், தானியங்கள், பயறு,கௌபி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்தோம். அது இந்த பணம் எமது விவசாயிகளின் கைகளில் சென்றடைய வேண்டும் என்பதற்காகும்.

இப்போது நாங்கள் கிராமத்திற்கு வரும்போது அமைச்சுகளின் செயலாளர்கள் அனைவரும் வருகிறார்கள். கிராமத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது, உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும் போது மக்களின் வாழ்க்கை எளிதாகிறது. அவர்கள் தங்கள் உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்ல முடியும். ஒரு அரசாங்கமாக நாம் அதைத்தான் செய்ய வேண்டும். மக்களுக்குத் தேவையான வீதிகளை நாம் நிர்மாணிக்க வேண்டும். தண்ணீர் வழங்கப்பட வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி பெற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும். அதுவே எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கை.

நான் வருகிறேன் என்று சொன்னவுடன் வீதிகள் அமைக்கப்பட்டிருப்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இது எவ்வளவு பெரிய விடயம். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் என்னை 60 மாதங்களுக்காக தெரிவு செய்தீர்கள். 16 மாதங்களே கடந்துள்ளன. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே நான் மீண்டும் வரப்போவதில்லை என்று சொன்னபோது சிலர் குழப்பமடைகின்றனர். அதனை தீர்மானிப்பவர்கள் மக்கள். எனக்கு வழங்கப்பட்ட 60 மாத கால வேலைத் திட்டங்களை நான் முதலில் செய்ய வேண்டும். பின்னர் மீதமுள்ளவற்றைப் பற்றி சிந்திக்கலாம். இந்த 60 மாதங்களில் எங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்வதே எனது எதிர்பார்ப்பு. எல்லா காலங்களிலும் நகரங்களில் மட்டும் வேலை செய்ய முடியாது. பெரும்பாலானவர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். அங்கிருந்துதான் நெல் வருகிறது. காய்கறிகள் வருகின்றன. இவை எல்லாம் கிராமத்திலேயே நடக்கின்றன. கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை நாம் அதிகரிக்க வேண்டும்.

கிராமங்களுக்கு செல்லும்போது அந்த மக்கள் வேறு எதனையும் கேட்பதில்லை. தங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருமாறே அவர்கள் கேட்கின்றனர். அப்போது அவர்களுக்கு கைத்தொழில்களை செய்துகொள்ள முடியுமாக இருக்கும். தங்களது. அறுவடைகளை சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியும். சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவை தான் அரசாங்கத்தினால் செய்ய முடியுமான விடயங்கள்.

வீதிகளை நிர்மாணிக்கும்போது சில வேளையில் எம்மீதே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்று ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பசறை பஸ் வண்டி ஒன்று 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 43 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் வண்டிகள் மிக வேகமாக செல்கின்றன. ஆனால் வீதிகள் மிகவும் குறுகியதாக காணப்படுகின்றன. மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இப்பிரதேசங்களில் உள்ள வீதிகள் மிகவும் ஆபத்தானவை. இவற்றை நாம் சரியாக செய்து கொடுக்க வேண்டும்.

இன்று பலர் நாம் சுற்றாடலை அழிவுக்குள்ளாக்குவதாக எம்மை தூற்றுகின்றனர். நாங்கள் சுற்றாடலை மிகவும் நேசிக்கிறோம். நான் ஒருபோதும் சுற்றாடலை அழித்ததில்லை. கிராமத்தில் உள்ள மக்கள் சுற்றாடலை அழிப்பதில்லை.  அவர்கள் சுற்றாடலோடு மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய போலி குற்றச்சாட்டுக்களை முன்வைப்போரையும் இந்த அமைப்புக்களையும் பார்க்கிலும் எனக்கு சுற்றாடல் பற்றிய கரிசனை உள்ளது.

கொழும்பு நகரம் குப்பை மேடாக காட்சியளித்தது. சுற்றாடல் அழிக்கப்பட்டு கொங்கிரீட் காடாக இருந்தது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களின் அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளையும் நான் பசுமை நகரமாக மாற்றினேன். மரங்கள் நடப்பட்டன. பூங்காக்கள் அமைக்கப்பட்டன, ஈர நிலங்கள் பாதுகாக்கப்பட்டன. இது கொழும்பு நகரத்தில். கோட்டே, பிலியந்தல, கஸ்பேவ போன்ற பிரதேசங்களில் ஈர நில பூங்காக்கள் அமைக்கப்பட்டன. வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தினோம். இவை தான் சுற்றாடல். குப்பைகூலங்களை அகற்றினோம். மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதுதான் சுற்றாடல் அபிவிருத்தியாகும். சுதந்திர சதுக்கத்தின் அருகில் குப்பை மேடு காணப்பட்டது. இன்று சுதந்திர சதுக்கத்தை பூங்காவாக நான் மாற்றி இருக்கின்றேன். வீதியில் நாக மரங்கள் நடப்பட்டுள்ளன. பாராளுமன்ற சூழலில் வளர்ந்திருக்கும் மரங்கள் நான் நாட்டியவையாகும். நீர்த் தேக்கத்தை அமைத்தோம். இவ்வாறு சுற்றாடலை பாதுகாக்க சுற்றாடலை அபிவிருத்தி செய்தவருக்குத்தான் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு தூற்றுகின்ற எவரும் சுற்றாடலுடன் தொடர்புபட்ட எந்தவொரு திட்டத்தையும் செய்தவர்களல்ல.

நாங்கள் விகாரமகாதேவி பூங்காவை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறோம். அதுவும் அழிவுற்றே இருந்தது. நாம் அங்கு மரங்களை நாட்டினோம். நடை பாதைகளை அமைத்து அழகிய பூங்காவாக மாற்றினோம். நேற்று அங்கு பாரிய பதாகைகள் கட்டப்பட்டு சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. அப்படியல்ல சுற்றாடலை பாதுகாப்பது. அதன் மூலம் சுற்றாடல் அழிவடைகின்றது. கொழும்பு நகரில் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சுவரொட்டிகள் ஒட்டுவதை நான் நிறுத்தினேன். பதாகைகளை அமைப்பதையும் நிறுத்தினேன். சுற்றாடலை பாதுகாப்பது என்பது சுற்றாடலை அபிவிருத்தி செய்வதாகும். அது பற்றிய தெளிவு என்னிடம் உள்ளது. நான் அதனை நடைமுறை ரீதியாக செய்து காட்டிய ஒருவன். சுற்றாடலை பற்றி நான் நன்கு அறிவேன்.

ஒரு கிராமத்திற்கு வீதி தேவை என்றால் அந்த வீதியை அமைத்துக்கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபோது கிராமிய மக்கள் எப்படி வாழ்வது. நான் இங்கு வரும் வழியில் மக்களுடன் உரையாடினேன். அவர்கள் பல்வேறு கஷ்டங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களது பிள்ளைகளுக்கு பாடசாலைகளுக்கு செல்வதற்கு வழியில்லை. மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்காமல் நாம் கொழும்பிலோ அல்லது வேறு எங்குமோ இருந்துகொண்டு சுற்றாடலை பற்றி பேசுவது பயனற்றதாகும். ஆதிவாசிகள் பல வருடங்களாக காட்டிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு காட்டில் இருக்க வேண்டாம் என்று கூறுகின்றார்கள். பிக்குகள் ஆலோசனை சபை மாதத்தில் ஒரு முறை ஒன்று கூடுகின்றது. அங்கு நாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் வருகை தருகிறார்கள். நேற்று மித்திரிகல, ஆரன்யா சேனாசனவின் தேரர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக பேசினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வனப் பாதுகாப்பு வன சீவராசிகள் துறையினால் கஷ்டங்கள் கொடுக்கப்படுகின்றது. மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் காட்டிலிருந்து தியானம் செய்கிறோம். இப்போது அதற்கு இடமளிக்கிறார்கள் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். தேரர்கள் ஒருபோதும் காடுகளை அழித்தது கிடையாது.

இப்போது வனப்பாதுகாப்பு திணைக்களம் உள்ளது. வன சீவராசிகள் திணைக்களம் உள்ளது, சுற்றாடல் அமைச்சு உள்ளது. இந்த அனைத்து நிறுவனங்களும் மக்கள் வாழ்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவேயன்றி அவர்களுக்கு கஷ்டங்களை கொடுப்பதற்காகவல்ல. பிழையான விடயங்கள் இடம்பெறுமானால் அதனை நிறுத்த வேண்டும். நாம் காடுகளை பாதுகாக்க வேண்டும். ஆறுகளை பாதுகாக்க வேண்டும். மக்களும் வாழ வேண்டும். சதுப்பு நிலங்கள் உள்ளன. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சதுப்பு நிலங்கள் நிரப்பப்பட்டபோது நான் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்துபோது அவற்றை நாம் பாதுகாத்தோம். ஆனால் கடந்த ஐந்து வருடக் காலப் பகுதியில் அவை நிரப்பப்பட்டுள்ளன. நான் இப்போது கிராமங்களுக்குச் சென்று இவ்வாறு பேசும்போது எல்லா மாவட்டங்களிலும் உள்ள மக்கள் அவர்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர். அவர்களுக்கு தற்போது விவசாயத்தில் ஈடுபட இடமளிக்கப்படுவதில்லை. இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு நான் வன சீவராசிகள் துறையினரிடம் கூறினேன். இவ்வாறு காணிகள் எல்லையிடப்பட்டு இருப்பது கூகுல் வரைபடத்தை பார்வையிட்டாகும். நடைமுறை ரீதியாக அல்ல. இதனால் தான் பெரும்பாலானவர்கள் அதுபற்றி குறை கூறுகின்றனர்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மக்களிடம் செல்லும்போது அவர்கள் இத்தகைய பிரச்சினைகளை முன்வைக்கின்றபோது எதுவுமே கேட்காததுபோல் இருக்கவா சொல்கின்றீர்கள். அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும். தீர்வுகளை வழங்க வேண்டும். அதிகாரிகள் வகை சொல்ல வேண்டும். அதுபற்றி கண்டறிந்து அவ்வாறு நடந்திருக்குமேயானால் அதனை சரி செய்து கொடுக்க வேண்டும்.

இப்படி செய்யும் போது நான் காடுகளை வெட்டச் சொன்னதாகக்
கூறி திரிபுபடுத்தி வெவ்வேறு விதமாக கருத்துக்களை முன்வைக்கின்றனர். காடுகளை வெட்டுவதற்கு அனுமதியளிப்பது பற்றியல்ல நான் கூறியது. இவ்வாறு கூச்சலிடும் எதிர்க்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது மகளுக்கு ஹந்தானை பாதுகாக்கப்பட்ட வனத்திலிருந்து அன்பளிப்பு காணி உறுதியொன்றை வழங்கியிருப்பது பற்றி இன்று நான் பத்திரிகையில் படித்தேன். அவர்கள் அந்த காணியை சுத்தம் செய்திருக்கிறார்கள். அமைச்சர் ஒருவருக்கு அதைச் செய்ய முடியும். ஆனால் கிராமங்களில் உள்ள இந்த அப்பாவி மக்களின் தவறினை சரி செய்கின்றபோது அதற்காக அழுதுபுலம்புகிறார்கள். ஹந்தானையில் அவ்வாறு செய்த அமைச்சரின் செயலுக்கு எதிராக பேச யாரும் இல்லை.

விசித்திரமான ஊடகக் குழுக்களே தற்போது இருக்கின்றன. ஊடக சுதந்திரம் என்பது ஊடக உரிமையாளர்களின் சுதந்திரம் அல்ல. ஊடக நிறுவன உரிமையாளர்களுக்கு தேவையான வகையில் நாட்டை கொண்டு செல்வார்களாயின் அது ஊடக மாபியாவாகும். எமது நாட்டில் அரசர்களும் இல்லை. மகா ராஜாக்களும் இல்லை. மகா ராஜாக்கள் இருந்தது இந்தியாவில். ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்தையும் அதிகாரத்தில் உள்ளவர்களையும் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன. அது என்னிடம் நடக்காது. அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டுமாயின் எவ்வாறு அதனை செய்ய வேண்டுமென்பதும் எனக்குத் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 16 மாதங்கள் நான் இந்த நாட்டை ஆட்சி செய்தேன். நான் எந்தவொரு ஊடகத்திற்கும் எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. ஆனால் அவர்கள் இதனை தவறாக பயன்படுத்துவார்களாயின் அதற்கும் சட்டம் உள்ளது. நான் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன். அந்த ஊடகம் மட்டுமன்றி தேசிய சிந்தனையோடு இருக்கின்ற ஊடகங்களும் மருத மரங்களை வெட்டியதாக பொய்யான தகவலை வெளியிட்டு இருந்தது.

நாம் யுத்தம் செய்த காலத்திலும் இந்த ஊடகம் தான் எமக்கு எதிராக வேலை செய்தது. அவர்களின் ஒரு குழுவே மீண்டும் இவ்வாறான பொய் பிரச்சாரங்களை செய்கின்றது. அவர்களினால் கொண்டு வரப்பட்ட அரசாங்கம் எதனைச் செய்தாலும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

சென்ற ஐந்த வருட காலத்தில் சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பும் இடம்பெறவில்லையா என்பதை சிந்தித்து பாருங்கள். நான் இதனை தரவுகளின் அடிப்படையிலேயே குறிப்பிட விரும்புகின்றேன். எனக்கு நேற்று சுற்றாடல் அதிகார சபையின் தவிசாளர் இவ் விபரங்களை அனுப்பி வைத்தார். 2015 முதல் 2019 வரை குருணாகலையில் அனுமதியின்றி 77 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. புத்தளத்தில் 258 ஏக்கர், மொனராகலையில் 100 ஏக்கர், இரத்தினபுரியில் 44 ஏக்கர், அனுராதபுரத்தில் 222 ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக யாரும் கண்ணீர் வடிக்கவில்லை. இதனை அவர்கள் அக்காலத்தில் கண்டுகொள்ளவும் இல்லை. ஏனென்றால் அன்று இருந்த அரசாங்கம், அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் என்பதினாலாகும்.

குருணாகலை மாவட்டத்தில் கல்கமுவ பிரதேச செயலக பிரிவில் தோரவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் மைலேவ புராதன ரஜ மகா விகாரைக்குரிய காணியில் 2017ஆம் ஆண்டு 70 ஏக்கர்கள் காடழிக்கப்பட்டு தென்னை, மா, மஞ்சள் மற்றும் சோளம் பயிர்ச் செய்கையில் ஒரு நபர் ஈடுபட்டுள்ளார். இன்னும் இருக்கின்றது. அங்குறுகந்த வன ஒதுக்கீடு, ரிதிகம பிரதேச செயலாளர் பிரிவு, வெளிக்கந்த அரச காடுகள், புத்தளம், மொனராகலை, கேகாலை போன்ற எல்லா இடங்களிலும் 2015 தொடக்கம் 2019 வரை காடுகள் அழிக்கப்பட்டதற்கான விபரம் உள்ளன. அவர்களே காடுகள் அழிக்கப்படுவதாக தற்போது ஊடகங்களுக்கு வந்து கருத்து தெரிவிக்கின்றனர். அக்காலத்தில் எதுவும் நடைபெறாததுபோல் நான் வந்துதான் காடுகளை அழிப்பதாக கூறுகின்றனர். நான் மக்களின் பிரச்சினைகளை கேட்டு அவற்றுக்கு தீர்வுகளையே வழங்கினேன்.

பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதிக்கு சென்றபோது அங்குள்ள பால் பண்ணையாளர்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்தனர். நாம் பால் பண்ணையாளர்களை முன்னேற்றுவதற்காக பால் உற்பத்தியை அதிகரித்து தருமாறு கூறுகின்றோம். ஆனால் பொலன்னறுவையில் கறவை பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் என்ற வகையில் பால் பண்ணையாளர்களுக்கு நாம் மேய்ச்சல் நிலங்களை தேடிக்கொடுக்க வேண்டும். அப்படி இல்லையாயின் அதற்கு மாற்றுத் தீர்வுகளை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாதாபோது எவ்வாறு பால் பண்ணையாளர்கள் முன்னேறுவது. அவர்களின் வியாபாரத்தை  முன்னேற்றுவது.

நேற்று எனக்கு அமெரிக்காவில் இருந்து வருகை தந்த சங்கைக்குரிய பியனந்த தேரர் அவர்கள் இருவட்டு (டிவிடி) ஒன்றை கையளித்தார். அதில் கறவை பசுக்கள் காடுகளில் இருப்பது பயிர்ச் செய்கைக்கு உகந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நமது காடுகளில் கறவை பசுக்களுக்கு இடமளிக்க விடுவதில்லை. இவற்றைப் பற்றி வன ஜீவராசிகள் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் பார்க்க வேண்டும். ஆய்வுகள் செய்ய வேண்டும். நாட்டை நேசிக்கின்ற, கலாசாரத்தை நேசிக்கின்ற, தேசிய பண்பாடுகளை பாதுகாக்கின்ற, மதத்தைப் பாதுகாக்கின்ற கொள்கையுள்ள அரசாங்கம் ஒன்று அதிகாரத்திற்கு வருகின்ற நேரம் அதற்கு எதிராக இவ் அனைத்தையும் அழிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர். இவற்றிலிருந்து நாம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தீவிரவாதத்தை முற்றாக அழித்து இந்நாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளும்போது 2015ல் பொய்யான பிரச்சாரங்களை கூறி மக்களை ஏமாற்றி அந்த அரசாங்கத்தை வீழ்த்தினர். அதற்கு பின்னர் என்ன நடந்தது. இராணுவ வீரர்கள் சிறைக்கு சென்றனர். பௌத்த பிக்குமார் சிறைபடுத்தப்பட்டனர். நாட்டில் அன்று இருந்த அரசாங்கம் எமது இராணுவத்தினருக்கு எதிராகவே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

ஜேவிபி சூழலியலாளர்கள் சிங்கராஜ வனத்தில் இறுதி பயணம் செய்த இன்னுமொரு மரம் என்று முக நூலில் பதிவிடுகின்றனர். ஆனால் உண்மையில் இது என்ன? இந்தியாவில் ஒடிசா நகரத்தில் கல்குவாரி போன்ற பிரதேசம் ஒன்றில் வெட்டப்பட்ட ஒரு மரமாகும். மீண்டும் அவர்களே உடுதும்பர காடழிப்பு என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தனர். அதனை பார்த்தவுடனேயே தெரியும் அது இந்நாட்டில் நடைபெற்றதல்ல என்று. வேரா ராடொச்சில் என்ற பெண்மனி தனது இணையதளத்தில் வெளிநாடு ஒன்றில் ஒரு வகை வண்டு இனத்தால் சேதமடைந்த மரங்களை வெட்டுவதினால் காடுகளுக்கு ஏற்பட்ட நிலைமையை காட்டும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அப்புகைப்படத்தை காட்டியே உடுதும்பர காடழிப்பு என்று கூறுகின்றனர்.

(English) Recent News

Most popular