Presidential Secretariat of Sri Lanka

இலங்கை மற்றும் பிராந்தியத்தின் மாற்றத்துக்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு…

துறைமுக நகரில் முதலீடு செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பு…

இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம், மாற்றத்துக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

உலகில் வேகமாக வளர்ந்துவரும் பிராந்தியங்களில், முக்கிய சேவை மையமாக துறைமுக நகரத்தை மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பாகும். இங்கு முதலீடு செய்வதன் மூலம், துறைமுக நகரம் வழங்கும் தனித்துவமான பயன்களையும் பல்வேறு வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்த, அனைத்து நாடுகளிலும் உள்ள வர்த்தகத் தலைவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

முதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தகச் சங்கம் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஆகியன ஒன்றிணைந்து  ஏற்பாடு செய்த, “2021 இலங்கை முதலீட்டு மன்றம்” என்ற தலைப்பிலான மூன்று நாள் அமர்வை இன்று (07) முற்பகல் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இம்மன்றத்தின் மூலம், இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதனச் சந்தை வாய்ப்புகள் தொடர்பான முழுமையான அனுபவம் மற்றும் விரிவான புரிந்துணர்வை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மன்றத்தின் இரண்டாம் நாளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் மூன்றாவது நாளில், நிதி, மூலதனச் சந்தை விவகார இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

2030ஆம் ஆண்டுக்குள், இலங்கையின் தேசிய உற்பத்தியைத் தற்போதைய மட்டத்திலிருந்து தனிநபர் மொத்தத் தேசிய உற்பத்தி 8000 அமெரிக்க டொலர்கள் வரை இரட்டிப்பாக்குவதற்காக, துரித பொருளாதார வளர்ச்சித் திட்டமொன்றைத் செயற்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். தனித்துவமான புவிசார் மூலோபாய நிலை, அரசியல் ஸ்தீரத்தன்மை, வலுவான நிறுவனங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, கல்வி அறிவு மற்றும் திறமைவாய்ந்த தொழிற்படை என்பன, இந்நாட்டின் சக்திகளாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்கை அடைவதற்கான தளத்தை அமைப்பதற்கு, இவற்றைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் மையமாகவே பல நூற்றாண்டுகளாக இலங்கை இருந்து வருகின்றது. கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகங்களில் காணப்படுகின்ற சர்வதேச தரத்திலான வசதிகள், இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு, செயற்திறன்மிக்க சேவைகளை வழங்கக்கூடிய இயலுமைகளைக் கொண்டுள்ளன.

பிராந்தியத்தின் கப்பல் போக்குவரத்து மற்றும் தங்குமிட மையமாக இலங்கை நன்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், இத்துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக, ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆரோக்கியமான மற்றும் சேதனமுறை விவசாயத்தை ஊக்குவிப்பதில், அரசாங்கம் ஓர் உறுதியான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆரோக்கியத்தில் கரிசனை கொண்டுள்ள பிராந்திய மக்களுக்கு, உயர்தரமான விவசாய உற்பத்திகளை வழங்க இலங்கையால் முடியும். இச்சூழலில், புதிய தொழிநுட்பங்கள் மற்றும் விவசாய முறைமைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

2030ஆம் ஆண்டுக்குள், தேசிய மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை மீள்பிறப்பாக்கச் சக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் இலக்கு. மின்சார விநியோகத்தை அதிகரித்தல் மற்றும் தொழில்மயமாக்களை மேம்படுத்துவதற்கு, பாரியளவிலான சூரிய, காற்றாலை மின்திட்டங்களில் முதலீடுகளைச் செய்யவும், முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.

பல உயர் தொழிநுட்பக் கைத்தொழில்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு மூலப்பொருட்கள் இலங்கையில் உள்ளன. இந்த வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கின்ற உற்பத்திக் கைத்தொழிலில் முதலீடு செய்வதை அரசாங்கம் ஊக்குவிப்பதோடு, எதிர்காலத்தில் உலகளாவிய சந்தைக்கு இலத்திரனியல் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் பாதையை நோக்கிப் பிரவேசிப்பதற்கு எதிர்பார்ப்பதால், அதற்காகவும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

உலகம் பூராகவும் வசிக்கின்ற பிரதான முதலீட்டாளர்களில் 3500க்கும் மேற்பட்டோர், காணொளி தொழிநுட்பத்தினூடாக இந்த மூன்று அமர்வுகளில் கலந்துகொள்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வதற்காக நடைபெறும், ஆசியாவின் முதலாவது மற்றும் பாரிய வழிகாட்டல் மன்றம் இதுவென்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். ஐரோப்பா மற்றும் அமெரிக்கத் தொழில் முயற்சியாளர்களின் வசதி கருதி, இரண்டாவது அமர்வாக மன்றத்தை ஔிபரப்புச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரி, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே (Gopal Baglay), தென்கொரிய தூதுவர் வுன்ஜின் ஜியோன்க் (Woonjin Jeong), ஜப்பான் தூதுவர் அக்கிரா சுக்கியாமா (Akira Sugiyama),  சீனத் தூதுவர் சீ செங் ஹொங், (Qi Zhen hong),  ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிக்குழுவின் பிரதித் தலைவர் தோர்ஸ்டன் பார்க்பிரேட் (Thorsten Bargfrede) மற்றும் அமெரிக்கத் தூதரக அலுவலகத்தின் பிரதம தூதரக உத்தியோகத்தர் மாட்டின் கெலி (Martin Kelly) ஆகியோர் வளவாளர்களாக அமர்வில் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய அமர்வுகளில், அந்தந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான தூதுவர்கள் அமர்வில் உரையாற்றவுள்ளனர். கொள்கை வகுப்பாளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காக, சர்வதேசப் பேச்சாளர்கள் பலரும் அமர்வில் கலந்துகொண்டனர்.

2021 இலங்கை முதலீட்டு மன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய விசேட உரை.

இலங்கை முதலீட்டு மன்றம் 2021இன் அங்குரார்ப்பண அமர்வில், உங்கள் மத்தியில் உரையாற்றுவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த நிகழ்வானது, இலங்கை தனது பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் வழங்கும் பல்வேறுபட்ட முதலீட்டு வாய்ப்புகளின் முழுமையான பார்வையை தருகிறது.

இந்த மன்றமானது, முதலீட்டுச் சபை, கொழும்பு பங்குச் சந்தை மற்றும் இலங்கை வர்த்தகச் சங்கம், முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது. இது, எங்கள் முதலீட்டுச் சூழலைப் பற்றிய வலுவான உரையாடல் மற்றும் தகவல் பகிர்வை ஊக்குவிப்பதுடன்,  நேரடி முதலீடுகளுக்கான வாய்ப்புகளையும் மூலதனச் சந்தைகள் மற்றும் கடன் சந்தைகளில் உள்ள வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த முதலீட்டு மன்றம், இலங்கைக்கு ஒரு முக்கியமான நேரத்தில் இடம்பெறுகிறது.

எனது அரசாங்கம், 2030ஆம் ஆண்டுக்குள் எமது தேசிய உற்பத்தியை அதன் தற்போதைய மட்டத்திலிருந்து 8,000 டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இரட்டிப்பாக்கவும் ஒரு தசாப்த கால மாற்றம் மற்றும் துரித பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ளும் இலட்சிய திட்டங்களையும் கொண்டுள்ளது.

எமது தனித்துவமான புவிசார் மூலோபாய நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை, வலுவான நிறுவனங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, கல்வியறிவு மற்றும் திறமைவாய்ந்த தொழிற்படை, உயர் வாழ்க்கைத் தரம் என்பன, இலங்கையின் பலமாகக் காணப்படுகின்றன. எமது வளர்ச்சி இலக்குக்கான தளத்தை அமைப்பதற்கு, இவை எமக்கு உதவும்.

மேலும், எமது உட்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மின் உற்பத்தியை அதிகரித்தல், வீதிகள் மற்றும் புகையிரத வலையமைப்புகளை மேம்படுத்துவதன் ஊடாகத் தொடர்பினை மேம்படுத்தல், எமது துறைமுகங்களை மேலும் விரிவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய அனைத்தும், எமது அபிவிருத்தி முயற்சிகளுக்கு வசதியளிப்பதாக அமைந்திருக்கின்றன.

ஸ்திரமான பெரும் பொருளாதார சூழலில், கொள்கை ஸ்திரத்தன்மையையும் நிலைத்தன்மையையும் பேணுவதற்கு நாம் மிகவும் உறுதிபூண்டுள்ளோம். முதலீட்டாளர்களுக்கு அதிக அக்கறை, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எங்கள் சட்ட மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. தேவையற்ற அதிகாரத்துவ முறைமைகள் அகற்றப்பட்டு, வர்த்தகத்தை எளிதாக்குவதை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் நெறிப்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில், முதலீட்டுக்கு ஏற்றவாறு எமது சூழலை மேலும் மேம்படுத்துவதனூடாக, இந்த மாற்றங்களைக் காணவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இலங்கையின் பல பொருளாதாரத் துறைகளில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளிக்கக்கூடிய கணிசமான வாய்ப்புகள் உள்ளன.

முக்கியமாக உலகளாவிய மையங்களிலிருந்து சில மணிநேரத் தொலைவில் அமைந்துள்ள புவிசார் மூலோபாய அமைவிடத்துடன், தெற்காசியா முழுவதிலும் சிறந்த இணைப்பினைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகிறது. வர்த்தகத் தலைநகரான கொழும்பு, இப்பிராந்தியத்தில் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் வாழ்வதற்குப் பொருத்தமான நகரங்களில் ஒன்றாகும்.

கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்துடன் இந்த நகரம் வழங்கும் பல வாய்ப்புகள், விரைவில் பெரிதும் முன்னேற்றமடையும். இது, உலகத்தரம்வாய்ந்த வதிவிட, வர்த்தக, சமூக மற்றும் பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்டிருக்கும் புதிய நகர வடிவமாக விளங்கும்.

இந்தத் துறைமுக நகரத்தை, உலகில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்தியத்துக்கான முக்கிய சேவை மையமாக மாற்றுவதே எமது தொலைநோக்காகும். அதன் குடியிருப்பாளர்கள், உற்பத்தித் திறன்வாய்ந்த பணிகளைச் செய்யத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் அதேநேரத்தில், பழைய மற்றும் புதுமை இரண்டையும் சிறப்பாக இணைக்கும் ஒரு துடிப்பான வெப்பமண்டல கடற்கரைச் சூழலில், மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து மகிழ்வார்கள்.

பரந்த பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வர்த்தகங்களுக்கு, விசேட சலுகைகள் மற்றும் விலக்களிப்புகளை உறுதி செய்வதற்கான விசேட சட்டம் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு முதலீடு செய்வதன் மூலம், துறைமுக நகரம் வழங்கும் தனித்துவ பலத்தையும் பல்வேறு வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்த அனைத்து நாடுகளிலும் உள்ள வர்த்தகத் தலைவர்களை நாம் ஊக்குவிக்கிறோம்.

இலங்கையானது, கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் மையமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. கொழும்பிலும் ஹம்பாந்தோட்டையிலும் உள்ள உலகத் தரம்வாய்ந்த துறைமுக உட்கட்டமைகளால், இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுக்கும்கூட சேவைகளை வழங்கக் கூடிய இயலுமையை எமது நாடு, கொண்டுள்ளது.

எனவே, பிராந்தியத்திற்கான கப்பல் போக்குவரத்து மற்றும் தங்குமிட மையமாகவே எமது நாடு நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால், இத்துறைக்கான முதலீடுகளை நாங்கள் அதிகளவில் ஊக்குவிக்கிறோம். இதற்கு வசதியளிப்பதற்காக, இத்தகைய முதலீடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் மரபு ரீதியான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படுகின்றன.

மிகவும் வளமான சூழலைக் கொண்டுள்ள இலங்கை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, வளமானதொரு விவசாயப் பாரம்பரியத்தை மேற்கொண்டு வருகிறது.

காலநிலை மாற்றமானது, உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறி வரும் சூழ்நிலையில், இந்த வளமான பாரம்பரியத்தை, புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒன்றிணைத்து, வியக்கத்தக்க வகையிலும் பேண்தகு அடிப்படையிலும் எமது விவசாய உற்பத்தியை மேம்படுத்த முயற்சிக்கிறோம்.

ஆரோக்கியமான, சேதன முறை விவசாயத்தை ஊக்குவிப்பதில் எனது அரசாங்கம் ஒர் உறுதியான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எதிர்காலத்தில், இலங்கையினால் பிராந்தியத்தில் உள்ள அதிகரித்த கேள்விகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான விவசாய உற்பத்திகளை, சுகாதாரக் கரிசனையுடன் வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தச் சூழலில், முதலீட்டுக்கான பல வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

நாட்டின் வனப்பகுதியை மேலும் அதிகரிப்பதற்கான எமது தேசிய உறுதிப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நிலப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்காமல், எமது விவசாயத் தளத்தின் உற்பத்தித்திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.

எனவே, சேதன முறையிலானதும், ஆரோக்கியமானதும், நிலையானதுமான வழிகளில் விளைச்சலை அதிகரிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நடைமுறைகளிலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் கடற்றொழில் துறைகளின் உற்பத்தித்திறனை நிலைபேறாக அதிகரிக்கும்  முன்னேற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எமது விவசாய உற்பத்திகள் மற்றும் தேயிலை, இறப்பர், தென்னை போன்ற எமது பாரம்பரிய ஏற்றுமதிப் பயிர்களின் ஏற்றுமதித் திறனை அதிகரிக்கக்கூடிய பெறுமதி சேர்க்கும் வர்த்தகங்களுக்கான முதலீடுகளையும் நாம் பெரிதும் ஊக்குவிக்கின்றோம்.

இலங்கை, தனது தொழிற்றுறை தளத்தை விரிவுபடுத்த முயற்சித்து வரும் நிலையில், அதிகரித்த மின் உற்பத்தி மிக முக்கியமான தேவைப்பாடுகளில் ஒன்றாகும்.

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் சுத்தமான மீள்பிறப்பாக்கச் சக்தி மூலங்களில் இருந்து 2030ஆம் ஆண்டளவில் எமது தேசிய மின்சார தேவைகளில் 70 சதவீதமான பங்களிப்பை உறுதி செய்வதற்கும் எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

எனவே, எமது மின்சார விநியோகத்தை நிலையானதாக அதிகரிக்கக் கூடிய, தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தளத்தை அமைக்கக்கூடிய பாரியளவிலான சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய, முதலீட்டாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

பல உயர் தொழில்நுட்பத் தொழில்களில் பயன்படுத்தப்படும் பல மூலப்பொருட்களின் அபரிமிதமான வளங்கள் இலங்கையில் உள்ளன. இந்த வளங்களுக்கு பெறுமதி சேர்க்கின்ற, எதிர்காலத்தில் உலகளாவிய சந்தைக்கு இலத்திரனியல் உதிரிப்பாகங்களின் உற்பத்தியாளராக மாறுவதற்கான பாதைக்கு நாட்டைக் கொண்டுவருவதற்கான உற்பத்தித் தொழில்களில் முதலீடுகளை ஊக்குவிக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

குறிப்பாக, இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையானது, வலுவான நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் தங்கள் சின்னத்தை பதித்த பல நிறுவனங்கள், எமது நாட்டில் உள்ளன. மேலும், உயர்தரக் கல்வி நிறுவனங்களானவை, ஒவ்வோர் ஆண்டும் இந்தத் துறையில் பல திறமையான தொழிலாளர்களை உருவாக்குகின்றன.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள், எதிர்காலத்தில் எமது தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் தரத்தையும் அளவையும் மேலும் அதிகரிக்கும். இதுபோன்ற திறன் விருத்திக்கு மேலதிகமாக, அரசாங்கம் பல முன்னோடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தகவல் தொழிநுட்பப் பூங்காக்கள் உள்ளிட்ட புதிய உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் இலங்கையைத் தலைமையகமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வரி விலக்குக் கொள்கை உள்ளிட்ட ஆதரவான கொள்கைப் பொறிமுறைகளை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

மில்லியன் கணக்கான டெராபைட் தரவை அனுப்பும் கடலுக்கடியில் உள்ள பாரிய கேபிள்களுக்கு, இலங்கையின் புவியியல் அருகாமையானது. பிராந்தியத்தின் தகவல் தேவைப்பாடுகளுக்கான சேவைகளை வழங்கும் தரவு மையங்களுக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும், ஒரு கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது. நாட்டின் சட்ட மற்றும் ஒழுங்குமுறைச் சூழலை உலகளாவிய தரத்துக்கு ஏற்பக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்டு வரும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு குறித்த புதிய சட்டத்துடன், இதற்கான சாத்தியம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

நீண்ட காலமாக உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய இடமாக இலங்கை இருந்து வருகிறது. தற்போதைய கொவிட் 19 பெருந்தொற்றினால், இத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்றுநோய்க்கு பிந்தைய சூழலைப் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அதன் துடிப்பான சுற்றுலாத் துறைக்கு புத்துயிர்ப்பளிக்க முயற்சித்து வருகிறது.

எனவே, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் அனுபவமிக்க சுற்றுலாத் திட்டங்கள் ஆகியவற்றுக்கான முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.

உலகளவில் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் உலகத் தரம்வாய்ந்ததும் அதிக தகுதியும் அனுபவமும் வாய்ந்த மருத்துவ நிபுணர்களால், நாட்டின் வலுவான பொதுச் சுகாதார முறைமை வளர்ச்சியடைந்துள்ள நிலையில், வளர்ந்து வரும் உலகளாவிய மருத்துவச் சுற்றுலாத் தொழிற்றுறையிலிருந்து பயனடைய இலங்கையும் முனைப்பாக உள்ளது.

அதனால், எமது வளமானதும் பாரம்பரியமானதுமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஆயுர்வேத பாரம்பரியத்தை முழுமையாக மேம்படுத்தும் மருத்துவ சுற்றுலாத் திட்டங்களுக்கும் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

பல்வேறு வகையான கவர்ச்சிகளுடன், பலமான உட்கட்டமைப்பு, உயர்தரமான வாழ்க்கை மற்றும் அறிவாற்றல்மிக்க இளைஞர்களைக் கொண்ட இலங்கையில், முன்னணிப் பல்கலைக்கழகங்களுக்கான வளாகங்களை அமைக்கவும் பிராந்தியத்தைச் சேர்ந்த மாணவர்களை ஈர்க்கவும் முக்கியத்துவமான இடமாக இருக்க முடியும்.

இந்த உரையில் நான் குறிப்பிட்ட பல துறைகளுக்கான முக்கிய முதலீடுகளைப் போலவே, முதலீடுகளுக்கான ஊக்குவிப்புகளை வழங்கவும் எனது அரசாங்கம் தயாராக உள்ளது.

இந்த மூன்று நாள்களில் இந்த நிகழ்வில் பங்கேற்பவர்கள், மேற்கூறிய விடயங்களையும் இலங்கை வழங்கும் பல வாய்ப்புகளையும் விரிவாக ஆராய முடியும்.

மிக முக்கியமாக, உயர் மட்டக் கொள்கை வகுப்பாளர்களுடனும் தொழில்நுட்ப வல்லுநர்கள், திட்ட உரிமையாளர்கள் மற்றும் இலங்கையில் உங்கள் முதலீட்டு அபிலாஷைகளை ஆதரிக்கக்கூடிய பங்காளர்களுடனும் நீங்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும்.

இலங்கை அரசாங்கம் முன்னோக்கிச் செயற்படுவதுடன், வர்த்தகத் துறைக்குச் சார்பாகவும் செயற்படுகிறது. எமது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளை, நாங்கள் மிகவும் சாதகமாகப் பார்ப்போம். மேலும், இத்தகைய முதலீடுகளின் வெற்றிக்கான சிறந்த சூழலை உருவாக்குவதற்கு, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

இலங்கையை முன்னேற்றுவது மட்டுமன்றி, பல துறைகளில், பல்வேறு வழிகளின் மூலம் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய மதிப்பை உருவாக்கும் அதே நேரத்தில், முழுப் பிராந்தியத்திலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேசிய மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க சூழலில் நாங்கள் இப்போது இருக்கிறோம்.

இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் இந்த முக்கியமான மாற்றத்துக்கான பயணத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கிறேன்.

நன்றி.

(English) Recent News